Monday, April 15, 2013

ஈழம் என்றொரு சிதைந்த யோனி..

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கை கல்கி எழுதிய 'குறி அறுத்தேன்' நூலிலிருந்து ..
ஈழம் என்றொரு சிதைந்த யோனி..
_______________________________________


திருநங்கை கல்கி சுப்ரமணியம்

நான்
சிந்திய குருதி
காய்ந்தபின்பு
செதுக்கிய வடுக்கள்
அடையாளங்களாய்
என் யோனியில்
நிலைக்கின்றன.

இப்போதெல்லாம்
வடுக்களை நான்
தொடும்போது
ஐயோ
வயிறு கிழிந்து
யோனி பிளந்து
இறந்துபோன
என் ஈழத்துச்சகோதரியின்
நினைவுகள்
நெருப்பாய் தகிக்கிறதே..

எனக்கான தேடலில்
நானும்
தன் இனத்திற்கான தேடலில்
அவளும்
வலி சுமந்தோமே...
அவள் வலியில்
சொற்ப வலியும்
வழிந்த குருதியின்
வாசமும் ஈரமும்
நானறிவேனே.
அந்த வலியின்
வாசல்வரை
சென்றுவந்தேன்
என்பதாலேயே
அவளுக்கு
நான் இன்னும்
நெருக்கமானேனே.

அவளை பிளந்து
கொன்ற மிருகங்கள்
அத்தோடு விடவில்லையே
அவள் பெற்ற
நன்மக்களையும்
தரையில்
தலையடித்து
கொன்றனரே?

ஐயோ அம்மிருகங்கள்
இன்னும் உயிருடன்
உலவிக்கொண்டுதானே
இருக்கின்றன.
என் செய்வேன்?

திருநங்கை
எனைக்கண்டு
சிரிக்கும்
தெருநாய்களிடம்
அவளை
சிதைத்துக்கொன்ற
மிருகங்களின்
சாயலை
காண்கிறேன்.
விறுவிறுவென்று
வெறிகொண்ட
வேங்கை ஒன்று
உள்ளே
திடுக்கென்று
விழிக்கிறது.

எனக்கான ஒன்று
நடக்கும்போது
விழி சிவந்து
நரம்புகள் புடைக்கின்றதே..
என் இனத்திற்கான
ஒன்று நடக்கும்போது
ஏன் சிவக்கவில்லை
புடைக்கவில்லை?
எங்கே போயிற்று
தமிழச்சி என்
வரலாற்று வீரம்?

ஐயோ
புனைவுக்கதைகள்
சொல்லி
எனை
ஏமாற்றிவிட்டனரே?

தமிழே..
தனைமறந்து
கவிதை சொல்வதையும்
தலைகவிழ்ந்து
கவலை கொள்வதையும்
தவிர வேறென்ன
கற்றுக்கொடுத்தாய்
எனக்கு...
என்
தலைமுறையையே
மயக்கத்தில்
வைத்தாயே?


ஐயோ
என் அடையாளம்
தந்த
அவமானங்கள்
இதயத்தில்
கீறல்களாய் இருக்க,

தொலைந்த தமிழரின்
சவக்குழிகளும்
இழந்த ஈழத்தின்
வரலாறுகளும்
சிவந்த
என் விழிகளில்
வழிந்த
கண்ணீர் கோடுகளிலும்,
சிதைந்த
என் யோனியின்
காய்ந்த மேடுகளிலும்,
இறந்த
என் இனத்தின்
வலிகளும்
வடுக்களுமாய்
புதைந்துபோயினவே.......
-------------------------------------------------------------------
.
நூலைபெற இங்கே சொடுக்குங்கள்.

1 comment:

பாரிசிவா said...

VERY NICE.THANKS TO KALKI.