Monday, October 10, 2016

அனாதை பாட்டியை அடக்கம் செய்த வடசென்னை திருநங்கைகள்

டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேசப்பட்டு என்ற மூதாட்டி முதுமையின் காரணமாக இறந்துபோனார்.

வறுமையால் வாடிய, குடும்பம் இருந்தும் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஒரு மூதாட்டியை அடக்கம்செய்ய பொதுமக்கள் யாரும் முன்வராததால் அந்தபகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் ரேணுகா தேவி, தாரா மற்றும் சில திருநங்கைகள் மூதாட்டியின் ஈமக்கிரியைகளை மகள்களின் ஸ்தானத்தில் இருந்தும் மகன்களின் ஸ்தானத்தில் இருந்தும் செய்தனர்.




திருநங்கை ரேணுகா தேவி மற்றும் அவரின் வளர்ப்புப்பிள்ளை ஆகியோர் கொள்ளி வைக்க சடங்குகள் நிறைவடைந்தன.

இந்த ஈமக்கிரியை நிகழ்வில் 30க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்துகொண்டனர். மூதாட்டியின் நல்லடக்கத்துக்கான செலவுகளை திருநங்கைகள் பலர் வழங்கினார். சில கட்சிப்பிரமுகர்களும் உதவிகள் செய்தனர்.


மூதாட்டி தேசப்பட்டு அம்மாவின் உறவினர்கள் ஒன்றிரண்டுபேர் வந்திருந்தும் திருநங்கைகள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. 
திருநங்கை ரேணுகா தேவி
ஒரு ஆதரவற்ற மூதாட்டியின் இறுதிச்சடங்கை திருநங்கைகள் நடத்தியது கண்டு அந்தப்பகுதி மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.

ஒரு காலத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு சமூகம் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியவிதம் அனைவரையும்  நெகிழவைத்து சிந்திக்கத்தூண்டியது.

வாழ்க ஈர நெஞ்சம் கொண்ட இந்த திருநங்கைகள். கருணை சுரக்கும் அவர்களின் ஈரநெஞ்சை வறுமை ஏதும்செய்துவிடவில்லை. வாழ்த்துவோம் நம் சகோதரிகளை!

- திருநங்கை கல்கி சுப்ரமணியம்
www.kalkisubramaniam.com
    

No comments: