Saturday, December 04, 2010

அரசியலில் பணியாற்றும் முழுத்தகுதியும், திறமையும் எங்களுக்கு உண்டு - திருநங்கை கல்கி

நேர்முகம் - சகா


அரவாணிகளுக்கு குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன?
முதல் பிரச்சினை மனம், உடல் என்கிறப் போராட்டங்களில் தடுமாற்றம் எங்களுக்குள் பெண்மை வெளிப்படும் பொழுதுக் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. அக்காவுக்கு கல்யாணம் நடக்காது, தங்கச்சிக்கு கல்யாணம் நடக்காது அதுமாதரி நிறைய விஷயங்கள். அதனால் பெரும்பாலானவர்கள் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அடுத்ததா கிண்டல்கள், கேலிகளுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகளில் இருந்துத் துரத்தப்படுகிறார்கள். அதனால் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து, என்ன பண்றாங்கன்னா ஒன்று, பாலியல் தொழில் அல்லது கைதட்டி பிச்சைக் கேட்பது அது இரண்டும் தான் பண்றாங்க.

இந்த நிலைமை எதனால் ஏற்படுது?
இருந்தே திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. பாலியல் அடையாளம் என்ற காரணமாக ஒதுக்கி வைப்பது. அரவாணிகளாக இருப்பது குற்றமல்ல, அது ஒருதன்மை. அதைப்பற்றிய பாடங்களும் எந்த பாடத்திட்டத்திலும் இல்லை. அதனால் பட்டம் படிச்சவன், ஆராய்ச்சிப் படிப்பு முடிச்சவன்னாலும் இரண்டாவது தான். படிச்சவனானாலும் திருநங்கைகள் விசயத்தில் ஒரே மாதிரிதான் நடந்துக்குறாங்க. அருவருப்பா பாக்குறது - பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்து கிறது - கழிப்பிடங்களாக உபயோகப்படுத்துறது.

உங்களுக்கு இது மாதிரியான சங்கடங்கள், துன்பங்கள் நிகழ்ந்தது உண்டா?
வந்து என் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை என் குடும்பத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்ப சென்னையில் இருந்தாலும் மாசத்துக்கு ஒருதரம் எங்க ஊருக்குப் போய் எங்க அம்மா, அக்கா, தங்கச்சி கூட இருந்துட்டு வருவேன். எனக்கு நண்பர்களும் நிறைய இருக்காங்க. எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் பெரிசா எதுவும் இல்லை. அந்த பாதிப்புகள், தொந்தரவுகள் அதிகம் நடந்து கொண்டிருந்தது.

இன்றைய தமிழக அரசு அரவாணிகளுக்கு தனியாக நலவாரியம் அமைத்து கொடுத்திருக்கு. அந்த நலவாரியம் அமைவதற்கு உங்களுக்கு பக்க பலமாக இருந்தார்ன்னு யாரைச் சொல்லுவீங்க?
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிதான். அவங்க அரவாணிகள் மேல ரொம்ப அன்பு கொண்டவங்க, அக்கறை கொண்டவங்க. அவங்களோட முயற்சியாலே அரவாணிகள் நலவாரியம் அமைச்சது மட்டுமல்லாமல் பல விசயங்களுக்கு அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துகிட்டே இருந்தாங்க. அரவாணிகள் உணர்வுகள் மதிக்கப்படனும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படனும் என்று எங்களுக்காக பல மேடைகளில் குரல் கொடுத்தார் கனிமொழி.

பெரும்பாலான திருநங்கைகளுக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இருப்பது இல்லை, அதற்கு என்ன காரணம்?

காரணமும் இந்த சமூகம் தான். ஏன்னா முறையான கல்விமுறை இல்லை. சரியான தகவல்கள் ஏதுமில்லை. இந்த சமூகம், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பதையே அங்கீகரிக்கவில்லை. இவர்கள் கோமாளிகள், பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் அப்படிங்கற பார்வைகள்தான் இருந்துட்டு இருக்கு. என்னைப்போன்று படித்த சிலபேர் தேடல்கள் பெரியளவிற்கு விரிவடையும். இணையத்தின் மூலமா சரியான சிகிச்சை, சரியான மாற்றம் அப்படின்னு நாங்க போயிற்றோம். ஆனால் படிக்காத, ஏழை அரவாணிகளெல்லாம் கொஞ்ச, கொஞ்சமாக காசு சேர்த்து என்ன சிகிச்சை செய்ய முடியும், அப்படின்னுதான் பார்ப்பாங்க.

மருத்துவர்கள் அரவாணிகள் பற்றி குறிப்பிடும்போது தங்களைப் பெண்கள் என்று மனதளவில்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஹார்மோன் மூலம் பெண்ணாக மாறுவதற்கு வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க இது சரியானது தானா?
கூற்றை திருநங்கை மருத்துவர் சொல்லியிருந்தா நான் ஏற்றுக்கொள்வேன். இதுவந்து மனக்குறைபாடுங்கற மாதிரியான கருத்துத்தான் அவர்களது கூற்று. ஆனா அப்படியல்ல. புராண காலத்தோடு இந்து இதிகாசங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள், பெண்கள், அரவாணிகள் என்ற மூன்று பேரும் இருந்திருக்கிறார்கள். மகாபாரதத்துல அர்ஜூனன் ஒருஆண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததா கதையும் உண்டு. சிகண்டிங்கற ஒரு அரவாணி வந்து பீஷ்மரை கொல்ற ஒரு பாத்திரமும் அந்த கதையில் உண்டு. இவர்களுக்கெல்லாம் மனநோயா? ஆக மருத்துவர்கள் வந்து இதுமாதிரி தவறான கருத்து வெச்சிருக்காங்க, இப்படி சொல்ற மருத்துவர்கள் யாரும் எங்களைப் போன்றவர்களுக்கு முறையான சிகிச்சை செய்யும்படி எந்தக்கோரிக்கையும் வச்சதில்லையே. எல்லா மேலைநாடுகளிலும் உள்ள மருத்துவர்களும் இது ஒரு மனநோயல்ல என்று நிரூபித்து விட்டார்கள்.

அரவாணியா இருக்கறதால சமூகத்துல வேறுபட்ட பார்வை இருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு வாடகைக்கு கிடைக்கிற துங்கறது பெரிய சிக்கலா இருக்கும். அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
பார்த்தீங்கன்னா நெறைய இருக்கு. ஒரு பக்கம் வந்து வேலைக்கு போகும்போதும் முழு பெண்ணாக அறுவை பண்ணிக்கிட்டாலும் நிறையப் பேருக்கு பொருளாதார வசதி இல்லாததால முகமாற்றம், உடல்ரீதியான மாற்றத்திற்கான மருந்துகள் உட்கொண்டு முழுப்பெண்ணாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். அதனால் சிலபேர் தோற்றத்தில்  ஆண் தன்மையோடு இருப்பாங்க. அவர்களுக்குத்தான் சமூகத்துல பெரிய சவால்கள் இருக்கு. அவர்களுக்கு எங்கேயும் வேலை கொடுக்கமாட்டார்கள். வேலைக்காரியா செக்கறதுக்குக் கூட யாரும் தயங்குவாங்க. சமூகத்துல எல்லா நிலையிலும் அவங்க தள்ளப்படுறாங்க. வீட்டவிட்டு வெளியே வந்தாலே கிண்டல், கேலி. இப்படி துன்பப்படும்போது சமூகத்திற்கெதிராக கைதட்டி பணம் கேட்பது கொடுக்காதபோது புடவையைத் தூக்கி காட்கிறது அல்லது பலாத்காரமாக பணம் பறிக்க முயற்சிக்கிறதுன்னு பன்றாங்க. இதற்குக் காரணம் சமூகம்தான். எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தையும் அழுத்தி அழுத்தி வெச்சீங்கன்னா ஒரு கட்டத்துல அது போராட்டமா வெடிக்கும். அரவாணிகள் வந்து என்னடா மரியாதை கொடுக்கறது எடுடா காசு என்கிற மாதிரியான நடவடிக்கைல இறங்கி விடுகிறார்கள். ஆனா இந்த மாதிரி நடந்து கொள்ளும் அரவாணிகள் மாறனும். முக்கியமா சமூகத்தோட பார்வையிலும், நடத்தையிலும் மாற்றங்கள் வேணும்.

அரவாணிகள் பற்றி மாணவர்கள், இளைய தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கு எந்த அணுகுமுறையைக் கையாள்கிறீர்கள்?
தலைமுறையினர், மாணவர்கள் எங்களைப்பற்றி புரிந்து கொள்வதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நான் சென்று உரையாற்றுகின்றேன். இங்கு மட்டுமல்ல, கேரளாவில் உள்ள கல்லூரிகளில் நுழைஞ்சு உரையாற்றுன முதல் அரவாணி நான்தான். கேரளா மாதிரியான ஒரு இடத்தில் அரவாணிகளுக்கு சுத்தமா அங்கீகாரம் கிடையாது. அடி உதை தான் கிடைக்கும். அங்குள்ள அரவாணிகள் ரொம்ப அடிமட்டத்துல இருக்காங்க. ஏன்னா, மதங்கிற ஒரு விஷம் வேரூன்றி இருக்கு. எங்கெல்லாம் மதம்ங்கறது பெரிய விஷயமா இருக்குதோ அங்கெல்லாம் அடக்குமுறை இருக்கும். அது வந்து அரவாணிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு. அதனால, அங்குள்ள கல்லூரிகளுக்கு சென்று உரையாற்றி நல்ல மாற்றத்திற்கான விதையை அங்கு விதைச்சிருக்கேன்.

சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
அரசும் செய்யாத ஒன்றை இப்ப இருக்கிற அரசு எங்களுக்கு நலவாரியம் அமைச்சு கொடுத்திருக்குது, அடுத்ததா அரசு கல்லூரிகள்ல ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை சேர்த்திருக்காங்க. இதுவந்து, கோ எஜிகேஷன் கல்லூரிகளில் மட்டும் இந்த அங்கீகாரம் இருக்கும்ன்னு அறிவிச்சிருக்காங்க. மூன்றாவதா திருநங்கைகளுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா எல்லாம் குடுக்குறாங்க. வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, எல்லாம் கொடுத்திட்டு இருக்காங்க. இன்னும் பாத்தீங்கன்னா அரவாணிகள் எத்தனைபேர் இருக்காங்கன்னு கணக்கெடுத்துட்டு இருக்காங்க. இத அடிப்படையா வெச்சு இன்னும் பல விசயங்களை எங்களுக்காக தமிழக அரசு செய்ய இருக்கு. அடுத்துவர அரசுகளும் அதைத்தொடர்ந்து செய்யும். தமிழ்நாட்டுல அரவாணிகளுக்காக அரசு உதவ தயாராக இருக்கு. எங்களுக்கு குரல் கொடுக்க அரசியல் தலைவர்களும் தயாரா இருங்காங்க. நாங்கள் எதிர்பார்க்கறது எல்லாம் மக்கள் மனமாற்றம் தான். அரசியல் தலைவர்கள் எல்லோரும் வந்து அரவாணிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. மக்கள் மனதில், ஒருவரின் உடல் அமைப்பு, உருவஅமைப்பு, பாலின அமைப்பை வைத்து எடைபோடுவது என்ற தவறான அணுகுமுறை மாற வேண்டும். அரவாணிகளும் மனிதர்கள் தான் என்கிற உணர்வு வரவேண்டும்.

உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் நீங்கள் காதல், திருமணம் போன்ற உறவுகளை எப்படி எதிர் நோக்கியிருக்கிறீர்கள்?
பாதுகாப்பற்றதாக எல்லா திருநங்கைகளுக்கும் இருக்கு. எல்லா உறவுகளையும் தூக்கிப் போட்டுவிட்டு வந்துவிடும் எல்லா அரவாணிகளுக்கும் ஆசை இருக்கும். தனக்கென்று ஒரு துணை வேணும் என்றும், தனக்கென்று காதலன், தனக்கென்று கணவன் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனா திருநங்கை வாழ்க்கை சோகம் என்னவென்றால் எந்த ஒரு ஆணும் நிரந்தரமா திருநங்கையோடு இருக்கமாட்டான். நிறையத் திருநங்கைகள் ஆண்களால் ஏமாற்றப்பட்டு, துன்புறுத்தப் பட்டு இருப்பார்கள்.

ஆண்கள் வந்து அரவாணிகளிடம் பழகுவது பணத்திற்காகவும், பாலியலுக்காவும் மட்டுமே. தனக்கு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவன் என்ன சொன்னாலும் எப்படி துன்புறுத்தினாலும் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆக, காதல் என்பது அரவாணிகள் வாழ்க்கையில் அப்பப்போ வந்துவிட்டுதான் போகும். நிரந்தரமாக இருக்காது. இது எல்லா அரவாணிகளுக்கும் பொருந்தும்.

உறவுகளினால் ஏற்படும் இதுபோன்ற ஏமாற்றங்களை எப்படி தாங்கிக் கொள்கிறீர்கள்?
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வது ஒரு கஷ்டமான விசயம். பெரிய போராட்டமாக இருக்கும். பலர் நொந்து தற் கொலைப் பண்ணிக்கொள்வார்கள். சிலர் எதிரா திரும்பிவிடுவார்கள். ஏமாற்றிய ஆணை பழிவாங்க எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விடுவார்கள். இன்னும் பலர் மனதுக்குள் குமுறிக் கொண்டு போதைப் பழக்கத்துக்கு, அதாவது குடி, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தித் துன்பத்தை மறக்க அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

ஜாதிக்கொடுமை, பெண்ணடிமை மூன்றாவதாக அரவாணிகள் ஒடுக்குமுறை இந்த மூன்றையும் செய்யும் ஆண் சமூகத்தின் மீது உங்கள் மனநிலை என்ன?
ஆணாதிக்கம் அப்டிங்கற விசயம் பெண் சமூகத்தையே அடக்கி வெச்சி ருக்குது. பெண்களை அடக்கும்போது அரவாணிகளை அடக்கு வது என்பது அதன் தொடர்ச்சி தான். இதற்கு மதங்கள் மிகப்பெரிய காரணம் தான். ஜாதிகள் பிரிப்பு, பாலின ஒடுக்குமுறை இதெல்லாம் அதற்குள் அடங்கிவிடுகிறது. ஆனா, அரவாணிகள் எல்லாம் இதற்குள் சிக்கவில்லை. நாங்கள் அரவாணிகளாக மாறிய உடனே எங்க ஜாதியெல்லாம் தூக்கிப்போட்டுவிடுகிறோம். அரவாணிகளாகிய நாங்களெல்லாம் ஒரே குடும்பமாக இருக்கிறோம். என்னுடைய குரு பிறப்பில் முஸ்லிம், நான் இந்து இருந்தாலும் அவர்தான் என்னுடைய தாய். ஆக ஜாதி மதமெல்லாம் எங்களுக்கு கிடையாது. மற்றபடி பெண்ணுக்கு ஏற்படுகிற அனைத்த அடக்குமுறைகளும் எங்களுக்கும் உண்டு. நீ பெண் மாதிரி இருக்கிறியா அதனால உன்னை அடக்குறேன் என்று ஆண் சமூகம் கேவலமாக நடந்து கொள்கிறது.

அரவாணிகளில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இப்ப கேள்வி என்னன்னா உயிர் கொல்லி நோய் அதாவது எச்ஐ.வி, எய்ட்ஸ் இவர்களால்தான் பரப்பப்படுவதாக சமூகத்தில் கட்டமைப்பு நடந்து கொண்டு இருக்கே?
தன்னுடைய உடம்பில் எச்ஐவி கிருமிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும் நடத்தல. ஒரு அரவாணிக்கு எய்ட்ஸ் வருதுன்னா அவங்ககிட்ட உறவு வைத்துக் கொள்கிற ஒரு ஆண் மூலமாகத்தான் வருது. அரவாணிகள் பாலியல் தொழில் செய்வது உடல் சுகத்திற்காக அல்ல, வயிற்றுப் பசிக்காக. எல்லா ஆண்கள் கிட்டேயும் காண்டம் போட்டுட்டு உறவு வெச்சுக்கங்கன்னு சொல்ல முடியாது. பல ஆண்கள் ரொம்ப முரட்டுத்தனமா இருப்பாங்க. அப்படி இருக்கறப்போ இந்தமாதிரி நோய் பரவுவதற்கு ஆண்கள்தான் காரணம்.

அரவாணிகள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை திருநங்கைகள்தான் அரசியலுக்கு, பொறுப்புகளுக்கு மிக மிக தகுதியானவர்கள் என்று சொல்வேன். அதற்கு காரணம் சமூகத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டது அரவாணிகள்தான், ஆணா இருந்து பெண்ணா மாறியதால் ஆணுக்கு என்ன பிரச்சினை பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்று தெரியும். அடுத்த காரணம் சொத்து சேர்த்து வைக்கலாம் என்கிற தேவை யெல்லாம் திருநங்கைகளுக்கு இல்லை. நாங்க அடிப்பட்டு வந்ததால் தைரியம் இருக்கு. அரசியலுக்கு தேவையான துணிச்சல், நேர்மை எங்களிடம் நிறையவே இருக்கு. அடுத்து வர தேர்தல்களில் நிறைய அரவாணிகள் போட்டியிடுவோம். அந்த சூழ்நிலை உருவாகி வருகிறது.

உங்களுக்காக மட்டுமேப் போராடிக்கொண்டு இருந்த நீங்கள் அதிரடி யாக ஈழத்தமிழர்களுக்காக உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் நடத்தினீர்கள். அதற்கு என்ன காரணம்?
எங்களுடையப் பிரச்சினைகள் ஒரு புறம் இருந்தாலும், சமூகத்துல என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டேதான் இருக்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்பதை எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறோம். போர் தீவிரமடைந்து பல பேர் மரணமடைந்தார்கள். அது எங்க எல்லாரையும் வேதனைப் படுத்துச்சு. தங்கள் குடும்பத்தை இழந்து, தன் சகோதரிகள், தாய் போன்றோரை இழந்து தன்னந்தனியாக தன்நாட்டை விட்டு எலிகளாக வரும் கொடுமை எங்களுக்கானதாக இருக்கிறது. ஏன்னா, நாங்க அரவாணிகள் என்றக் காரணத்திற் காகவே குடும்பத்தைவிட்டு வெளியே வந்து விடுகிறோம். அல்லது துரத்தப்படு கிறோம். ஆக சொந்த நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் வேதனை எங்களுக்கு இருக்கிறது. அதுபோலவே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளையும் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே தான் அந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத் தமிழர்களுக்கான எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவே நாங்கள் போராட்டத்தை நடத்தினோம். சகமனிதர்கள், தமிழர்கள் என்பதற்காக முதன்முறையாகக் குரல் கொடுத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அதுபோல ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தால்தான் சமூகத்தால் நாங்களும் அங்கீகரிக்கப்படுவோம்.

அரவாணிகள் என்பவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் தான் என்று கருத்து நிலவுகிறதே, அது உண்மையா?
முழுக்க முழுக்க தவறான கருத்து. சில கருத்துக்கள் வதந்திகளாய் பரவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், அரவாணிகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. ஓரினச் சேர்க்கையாளர்கள் அதாவது ஹோமோ செக்ஸ் வைத்து கொள்பவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகள் எதுவும் இருப்பதில்லை. தங்களை ஆண்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனா அரவாணிகளுக்கு தான் யார்? என்பதே முதல் பிரச்சினை. இரண்டாவதா தான் யாரால் ஈர்க்கப்படுகிறோம் என்கிறப் பாலியல் பிரச்சினை.

ஆக அரவாணியை பொறுத்தவரை பாலியல் உணர்வு என்பது இரண்டாம் பட்சம்தான். முதலாவது தான் ஆணா, பெண்ணா என்பதுதான். ஒரு அரவாணி யைப் பொறுத்தவரை துணையில்லாமல் பாலியல் ஈர்ப்பில்லாமல் இருந்து விடுவார். ஒரு ஆண் துணையில்லாமல் அவளால் இருக்கமுடியும். ஆனால் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்று வருவதைத் தவறென்று நாம் கருத முடியாது. ஏன்னா அது அவங்களுடைய தனிப்பட்ட விசயம். மற்றவர் படுக்கை அறையை நாம் எட்டிப்பார்க்கக் கூடாது

Saturday, April 03, 2010

திருநங்கைகள் திருமணம்பற்றி சன் தொலைக்காட்சியில் என் நேரலைப்பேட்டி..

திருநங்கைகள் திருமணம்பற்றி சன் தொலைக்காட்சியில் திரு.மலையப்பனின் கேள்விகளுக்கு எனது பதில்கள். பாலியல் மருத்துவர் காமராஜும் என்னோடு விவாதிக்கிறார்.




Monday, March 22, 2010

நான் கல்கி ஆனது எப்படி?


தன்னை உணர்ந்து நிரூபித்து, இந்தச் சமூகத்தின் பார்வையைத் திருத்தியவரின் கதை...
''நாங்கள் தேவதைகள் இல்லை. பிசாசுகளும் இல்லை. உங்கள் எல்லோரையும்போல இதயமும் இரைப்பையும் உள்ள மனிதர்கள். பசி, தூக்கம், கனவு, காதல், காமம், திறமை, தேடல், உழைப்பு, கருணை, காயம், கோபம், துக்கம், பெருமிதம் எல்லாம் எங்களுக்கும் உண்டு. நாங்களும் ஓர் அம்மாவின் வயிற்றில் இருந்துதான் பிறந்தோம், உங்களைப்போலவே!'' - செறிவான சொற்களில், திருத்தமான தமிழில் பேசுகிறார் கல்கி.

இந்தியத் திருநங்கைகளின் வாழ்க்கை மிகத் துயரமானது. அவமானங்களையும், ஏளனங்களையும், புறக்கணிப்புகளையுமே எதிர்கொள்ளும் திருநங்கைகள் சமூகத்தில் இருந்து மாற்றத்தை நோக்கிச் செயல்படும் ஒருவர்... கல்கி.

''நான் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். சர்வதேச உறவுகள் படிப்பில் இன்னொரு முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கிறேன். மேற்கொண்டும் படிப்பேன். இவை அனைத்தும் இவ்வுலகில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் திருநங்கைகள் மற்றும் ஒருபால் ஈர்ப்புக்கொண்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காகவே.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்றல் வீசும் அழகான பொள்ளாச்சி,நான் பிறந்த ஊர். வசதியான குடும்பத்தில் பிறந்ததால் கான்வென்ட் படிப்பு. அப்பா, தி.மு.க-வில் தீவிரமாக இருந்ததால் தமிழ் மீதான பற்று அதிகம். கலைஞர் எங்கள் ஊருக்குப் பேச வரும்போது அப்பா என்னையும் மேடையில் ஏற்றிவிடுவார். ஏழு வயதிலேயே தி.மு.க-வின் பிரசார ஜீப்களில் அப்பாவோடு சுற்றியிருக்கிறேன். போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். அறிந்தோ, அறியாமலோ போராட்டம் என்பது சிறு வயதில் இருந்தே பழகி விட்டது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் மார்க் நானே. இதெல்லாம் படிப்பு சார்ந் தவை. இதனால் எல்லாம் என் உடல் மாற்றங்களை மறைக்க முடியவில்லை. நானே குழம்பி நின்ற வேளையில்தான் சக மாணவர்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டேன். பள்ளியில் கிண்டலாக இருந்தது, கல்லூரியில் சீண்டலாக மாறியது. துன்பங்களையும் துயரங்களையுமே நண்பர்கள் பரிசளிக்க, நான் புத்தகங்களின் மடிக்குள் பதுங்கிக்கொண்டேன். பெரியார், அண்ணா, லெனின், பகுத்தறிவு, ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்க்கை என மேலும் மேலும் படித்தேன். புத்தகங்கள் மட்டுமே அனைத்துக்குமான வடிகாலாக இருந்தன.

என் தாய் - தந்தை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். என் தாய் நிறையத் துன்பங்களைச் சந்தித்தார். சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தாலும் துன்பங்களை எதிர்த்துப்போராட அவர் தயங்கியது இல்லை. என் அம்மாதான் எனக்கு ரோல் மாடல். நான் ஒரு திருநங்கை எனத் தெரிந்தும் ஆதரவோடு அரவணைத்துக்கொண்டவர் அம்மா. ஆனால், என்னைச் சுற்றிய மற்ற திருநங்கைகளின் வாழ்வு அவலத்திலும் அவலமாக இருப்பதைக் கண்டேன். வெளிச்சத்தில் கேலி கிண்டல், இருட்டில் பாலியல் கொடுமைகள். இவற்றை எதிர்த்துப் போராட இயலாத அளவுக்கு வறுமையும், கல்வியறிவு இல்லாமையும் அவர்களை வாட்டியது. 'பொருளாதாரப் பிரச்னைகள் இல்லாத, குடும்பத்தின் ஆதரவுக்குள் வாழும் நாம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்' என நினைத்து முழுக்க முழுக்க திருநங்கைகளுக்காகவே 'சகோதரி' என்ற இதழைத் தொடங்கினேன்.

படித்துக்கொண்டே ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைசெய்து எனது சுய சம்பாத்தியத்தில் முதல் பால்மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். ஓயாத தேடல் என்னை ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு இடம் பெயரவைத்தது. அபூர்வ இசைக் கருவிகள் தயாரிக்கும் கிராமத்து இளைஞர்கள் எட்டுப் பேருடன் சேர்ந்து காடுகள், மலைகள் என இசை ஆராய்ச்சிக்காக எங்கெல்லாமோ சுற்றினேன். என்னை ஓர் இனிய தோழியாக நடத்திய அவர்களின் இசை அறிவை உலகம் அறிந்துகொள்ள, ஓர் இணையதளம் தொடங்கினேன். இன்று அவர்கள் வெற்றியாளர்கள். அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது மனநிறைவைத் தருகிறது. திருநங்கைகளின் வாழ்வுரிமைபற்றிப் பேசப் பல மாநிலங்களுக்குச் சுற்றியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். திருநங்கைகள் மட்டுமின்றி, மாற்றுப்பாலின அடையாளம்கொண்டவர்கள், தன்பால் விழைவுகொண்டவர்களின் உரிமைக்காகவும் பேசுகிறேன். இதுகுறித்து ஊடகங்களுக்கான கருத்தரங்குகள், ஆவணப் படங்கள் எனத் தொடரும் பயணத்தில் என் சக திருநங்கைகள் பலர் என்னுடன் கைகோத்துள்ளனர்.

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யவும், பிச்சை எடுக்கவும் பிரதான காரணம் வறுமைதான். பெற்றோர்கள் கைவிடுகிறார்கள், ஊர் கிண்டல் செய்கிறது, சமூகம் வேலை தருவது இல்லை. பிறகு, அவர்கள் வாழ்வதற்கு என்ன வழி? பொருளாதார முன்னேற்றம்தான் மாற்றத்தின் முதல்படி. அதனால்தான் 'பட்டாம் பூச்சிகள் திட்டம்' என்ற பெயரில் அழகு ஆபரண நகைகள் தயாரிக்கும் சுயதொழில் திட்டத்தைத் திருநங்கைகளுக்குப் பயிற்றுவித்தோம். தமிழக அரசு 1.5 லட்ச ரூபாய் மானியம் வழங்கியது. திருநங்கைகள் அபரிமிதமான கலை ஆற்றல் மிக்கவர்கள். அதை உலகறியச் செய்வதற்காக 'விடுதலை கலைக் குழு' என்ற குழுவைத் தொடங்கிஇருக்கிறேன். ஆர்வமும் உழைப்பும்மிக்க 25 திருநங்கைகளுக்கு தமிழ்நாட்டு நடனம், ஆப்பிரிக்க, தென் அமெரிக்கப் பழங்குடி மக்களின் இசையையும் கற்பிக்கிறோம். வெகு விரைவில் தனித்துவம் மிக்க இசைக் கலைஞர்களாக அவர்கள் பரிணமிப் பார்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது www.thirunangai.net என நான் தொடங்கிய இணையதளம். பாலியல் சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் திருநங்கைகளை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஆண்களைக் கண்டறிவதே இதன் நோக்கம். திருநங்கைகளுக்கான உலகின் முதல் மேட்ரிமோனியல் வெப்சைட்டும்கூட. ஆறு திருநங்கைகளின் வரன்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப்சைட்டைப் பார்த்து, இப்போது உலகம் முழுவதும் இருந்து 600-க்கும் அதிகமான ஆண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 'உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது' என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

விரைவில், இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கப்போகிறது. இதில் திருநங்கைகளின் எண்ணிக்கை தனியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இடப்பங்கீடு, தேர்தலில் போட்டியிடும் உரிமை, சொத்துரிமை, திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு உரிமை போன்றவை வழங்கப்பட வேண்டும். என் நோக்கமும் செயல்பாடும் இப்போது இதை நோக்கித்தான் இருக்கிறது!''

*
மூலம் : ஆனந்த விகடன்

Sunday, February 14, 2010

திருநங்கைகள் தெருவுக்கு வருவது பெற்றோரால்தான் ...

அள்ளி அணைக்காவிட்டாலும் ....அடித்துத் துரத்தாதீர்கள் !

வீட்டிலிருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்து பஸ் ஏறுவோம். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு ஸீட் மட்டும் காலியாக இருக்கும். ஒடிப்போய் உட்கார நினைக்கையில், அதில் ஒரு 'திருநங்கை' உட்கார்ந்திருந்தால்... 'உட்காருவதா, வேண்டாமா' என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திவிட்டு, நம்மில் பெரும்பாலானோர் அவருடன் சேர்ந்து உட்கார மனம் (?) இன்றி, கால் வலித்தாலும் நின்று கொண்டே பயணம் செய்வோம்.

என்ன குற்றம் செய்தாலும் 'எம்புள்ள' என்று நம்மைக் கொண்டாடும் தாய் போல, அந்த திருநங்கைக்கும் ஒரு தாய் இருக்கிறார்தான். ஆனால், அந்தத் தாயும் வீட்டை விட்டுத் துரத்தி விடுவதால்தான், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பலர் பிச்சை எடுக்கிறார்கள்; சிலர் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்; ஒட்டுமொத்தமாக சமூகத்தின் விளிம்பிலேயேநிற்கவைக்கப்படுகிறார்கள். மைய நீரோட்டத்துக்குள் அவர்களை அனுமதிப்பதேயில்லை.

அது ஏன்?

'பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டால்... இவர்களின் இருப்பும், வாழ்வும் ஒரு சமூகப் பிரச்னையாக உருவாகாது!' என்கிறது, அவர்களைப் பற்றி பேசுவதற்காக 'அவள் விகடன்' ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடல்! பிரச்னையின் வலி, தீர்வுக்கான வழி என்று ஆலோசிக்கும் இந்தக் கலந்துரையாடலுக்கு, 'திருநங்கை' கல்கி, 'குடும்பநல ஆலோசகர்' மாக்தலின் ஜெயரத்னம், பெற்றோர் பிரதிநிதியாக மீனா, பதின்பருவத்தினரின் பிரதிநிதிகளாக தாமரைச்செல்வி, ஷபனா ஆகியோரின் வார்த்தைகள் வலு சேர்த்தன.



பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் பரிமாறப்பட்டன வார்த்தைகள்!

கல்கி: இப்படி டீன்-ஏஜ் பெண்கள், ஒரு அம்மா, ஆலோசனை சொல்ல ஒரு ஆலோசகர்னு எல்லாரும் திருநங்கைகள் நிலமை பத்தி பேச வந்திருக்கறதே என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களை எப்பவுமே இழிபிறவிகளா நினைக்கற, நடத்தற இந்தச் சமூகம் ஒரு விஷயத்தை நினைச்சுப் பார்க்கணும். இப்படி பிறந்தது எங்களோட தவறா...?

தாமரைச்செல்வி: சமூகம் இதைப் புரிதல் இல்லாம பார்க்கறது வருத்தமானதுதான்! பட், எனக்குத் தெரிஞ்சு எங்க டீன் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல யாரும் திருநங்கைகள் பத்தி இழிவாப் பேசறது கிடையாது. ஆனா, நீங்க 'எப்படி' இருப்பீங்கங்கறதைப் பத்தி எங்களுக்கு நிறைய கன்ஃப்யூஷன்ஸ்...

கல்கி: புரியுது. நிறைய பெரியவங்களுக்கும் இந்தக் குழப்பம் இருக்கு. திருநங்கைகள்ல இரண்டு வகை இருக்கோம். ஆணாப் பிறந்து, மனதளவில் பெண்ணா வாழ்ந்து, குறிப்பிட்ட கட்டத்தில் பெண்ணாவே மாறுறவங்க ஒரு வகை. இவங்க தங்களோட பாலின அடையாளமான ஆண் உறுப்பை ஆபரேஷன் மூலமா நீக்கிட்டு... மனதாலும், உடலாலும் பெண்ணாவே வாழ்வாங்க. பிறப்பால் பெண்ணாப் பிறந்து, மனதளவுல தங்களை ஆணா உணர்றவங்க, இன்னொரு வகை. சில கேஸ்கள்ல இரு பாலின உறுப்புகளோட சேர்ந்து பிறக்கறவங்களும் உண்டு.

மீனா: கல்கி, எந்த வயசுல இப்படி மாற்றம் உண்டாகும்..?

கல்கி: எல்லா பெற்றோர்களும் தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய விஷயம் இது. டீன்-ஏஜுலதான் முழுமையா தெரியும்னாலும்... எட்டு வயசுலயிருந்தே இந்த மாற்றம் ஆரம்பிக்கும். அப்போ பேசுறது, நடக்குறதுனு எல்லா செய்கைகளும், 'பாடி லாங்குவேஜு'ம் பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் போலவும், ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் போலவும் மாறும்.

மீனா: இது மனசுக்குள்ள நடக்கற மாற்றம்தானே... அத நாம மனசு வச்சா மாத்த முடியாதா...?

மாக்தலின்: இதுதான் எல்லா பெற்றோரின் எண்ணமும், கோபமும். 'ஏன் இப்படி நடந்துக்கற...? ஒழுங்கா லட்சணமா ஆம்பளப் புள்ள மாதிரி இரு'னு ஆரம்பிக்கற அவங்களோட கோபம், அப்புறம் அடி, சூடுனு மொழி மாறும். ஆனா, அந்த குழந்தையால அப்படி ஈஸியா மாத்திக்க முடியாது. ஏன்னா, இங்க ஒரு பெண்ணோட 'மனசு' ஆணோட 'உருவ'த்துக்குள்ள சிறைபட்டுக்கிடக்கு. ஆண் உருவத்துக்குள்ள இருக்கேங்கற காரணத்துக்காக, ஆணா நடந்துக்க முடியாது. அதை பெற்றோர்கள் புரிஞ்சுக்கணும்.


கல்கி: கூடவே, திருநங்கையா மாறிகிட்டுயிருக்கப்ப, 'நாம் ஆண் பிள்ளைதானே... அப்பறம் ஏன் பொண்ணு மாதிரியே நடந்துக்கத் தோணுது..?'னு அந்த குழந்தைக்கேவும் பயங்கரமான குழப்பம் இருக்கும். 13-14 வயசான டீன்- ஏஜ்ல இந்த உடல், மனமாற்றம் சீரியஸாகி, அவங்களை ஆட்டிப்படைக்கும்.

மாக்தலின்: இப்படி உடல் மாற்றம் ஒரு பக்கம் கஷ்டப்படுத்தும்னா, அப்பத்தான் பெற்றோர்களோட டார்ச்சரும் அதிகமா இருக்கும். 'எனக்குப் போயி ஏன் இப்படி ஒரு புள்ள பொறந்துச்சு'னு ரொம்பத் துன்புறுத்த ஆரம்பிப்பாங்க. அம்மா, அப்பா பண்ற டார்ச்சர் தாங்க முடியாம, ஏழாவது எட்டாவது படிக்கற அந்தக் குழந்தை வீட்டை விட்டு ஓடிடும்.

ஷபனா: அம்மா, அப்பாவுக்கும் இது கஷ்டமான சூழ்நிலைதானே? வீட்ல ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஒருத்தருக்கு 'இப்படி' பிரச்னைனா இன்னொருத்தருக்கு எப்படி கல்யாணம் நடக்கும்...?
மீனா: இதுதான் ஒவ்வொரு குடும்பத்துலயும் வர்ற தர்மசங்கடமான சூழ்நிலை. இன்னொரு பெண்ணைப் பார்க்க வர்ற மாப்பிள்ளை, 'ஐயோ.. நாளைக்கு இந்தப் பொண்ணும் இப்படி மாறிட்டா என்ன பண்றது'னு தயங்கி, அந்த பெண்ணோட கல்யாணமும் பாதிக்கப்படுது.
கல்கி: ஆனா, இது ஒரு நோய் கிடையாது. உடல் ஊனம்னுகூட சொல்ல முடியாது. பரம்பரையா பரவக்கூடிய வியாதியும் கிடையாது. அதனால அக்காவுக்கு பிரச்னை இருந்தா, தங்கச்சிக்கும் பிரச்னை வருங்கறதுக்கு... நோ சான்ஸ்! புரிஞ்சுக்கோங்க!

மாக்தலின்: பெற்றோர்கள் மட்டுமில்ல... அந்த குழந்தைகளோட டீச்சர்களும் இதப் புரிஞ்சுக்கணும். எங்கிட்ட வர்ற நிறைய கேஸ்கள்ல, டீச்சர்கள் 'இப்படி' நடக்காதேனு அந்தக் குழந்தைகள ரொம்பக் கடுமையா தண்டிச்சிருக்காங்க, மோசமான வார்த்தைகளால திட்டியிருக்காங்க.

ஷபனா: டீச்சர்ஸ§க்கு மட்டுமில்ல... அவங்க கூட இருக்குற ஃப்ரெண்ட்ஸ§ம் அவங்களுக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். என் காலேஜ்ல எங்களுக்கு இப்படி ஒரு திருநங்கை ஃப்ரெண்டா கிடைச்சப்போ... நாங்க அவளை வித்தியாசமா நடத்தினதில்ல. ஆனா, இது எல்லா இடங்களிலும் நடக்கிறதில்லைங்கறதுதான் பிரச்னை.
தாமரைச்செல்வி: அக்கா, என் கேள்வி உங்களை கஷ்டப்படுத்தினா... ஐ'ம் ஸாரி. ஆனா திருநங்கைகனாலே பிச்சை எடுக்கணுமா...? கெட்ட வார்த்தைகள்ல திட்டணுமா...? பாலியல் தொழில்தான் செய்யணுமா...?
கல்கி: இதுதான் இந்தச் சமூகம் எங்க மேல வச்சிருக்க அபிப்ராயம். ஆனா, நாங்க ஏன் பிச்சை எடுக்கிறோம்? எங்களுக்கு படிப்பறிவு இல்லை. எங்களுக்கு படிப்பு வராம இல்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிற நேரத்துலதான், இந்த மாற்றம் நடக்குது. அப்பா, அம்மாவே அவமானத்துக்குப் பயந்து எங்களை வீட்டை விட்டுத் துரத்திடறாங்க. அந்த பதினாலு, பதினஞ்சு வயசுல... எங்களுக்கு வேலை தரவும் யாரும் முன் வர்றதில்லை. நாங்க என்ன செய்வோம்? எங்களுக்கும் பசிக்கும்தானே? பிச்சையெடுக்கறோம். சிலர் பாலியல் தொழிலுக்குப் போறாங்க.
நாங்க கெட்ட வார்த்தைகள்ல திட்டுறோம்னு சொல்றீங்க. மறுக்கல. ஆனா, எங்கள கடந்து போறவங்கள்ல இருந்து சினிமா வரைக்கும் என்ன மாதிரி வார்த்தைகள்ல எல்லாம் இந்த சமூகம் எங்களை கொல்லுது?! (கனத்த மௌனம். பிறகு தொடர்கிறார்) நாங்கதான் மிகக் கொடுமையான அளவுக்கு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகறோம்... போலீஸ் ஸ்டேஷன்லகூட! எங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் இல்லை. இப்படியெல்லாம் எங்களை இந்தச் சமூகம் டார்ச்சர் பண்ற அளவுக்கு, அப்படி நாங்க என்ன குற்றம் செஞ்சோம்?
மாக்தலின்: திருநங்கைகளோட பிரச்னைகள் வெளிய தெரிஞ்சதே, இந்தியால எய்ட்ஸ் நோய் பெரிய அளவுக்கு வந்த பின்னாடிதான். வரும் காலத்துல மிகப் பெரிய சமூகப் பிரச்னையா இது உருவாகாம தடுக்கறது பெற்றோர்களோட கையிலதான் இருக்கு. ஒரு வீட்ல குழந்தை ஊனமா, மனவளர்ச்சி குன்றி பிறந்தா அந்த குழந்தையை எப்பாடுபட்டாவது காப்பாத்தறோம். அதேமாதிரி திருநங்கையா ஒரு குழந்தை உருவாக நேருச்சுனாலும், 'இது நாங்க பெத்த குழந்தை. யார், என்ன சொன்னாலும் இதை நாங்க கஷ்டப்பட்டு வளர்த்துதான் ஆவோம்!'னு பெற்றோர்கள் உறுதியா நினைச்சா, வைராக்கியமா இருந்தா... அது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது. அதே வீட்ல அது மற்ற குழந்தைகளைப்போல திறமையான குழந்தையா வளரும். அது பெற்றோர் மனசு வச்சாத்தான் நடக்கும். அந்த உறுதி பெத்தவங்களுக்குத்தான் வரணும்.
கல்கி: இது பெத்த உங்க குற்றமும் இல்லை. பிறந்த எங்க குற்றமும் இல்லை. இயற்கையோட குற்றம். அதுமட்டுமில்ல... இயற்கையில இதுவும் ஒரு படைப்புனே சொல்லலாம். ஆண், பெண்... இது ரெண்டுதான் மனிதப் படைப்புகள்னு யாரு முடிவெடுத்தது? மூணாவதாவும் ஒரு பாலினம் புராண, இதிகாச காலத்துல இருந்தே இருக்குதே! அர்த்தநாரீஸ்வரர்ங்கற பேருல ஈஸ்வரனை வழிபடற நீங்க... அதோட உருவமா வலம் வர்ற எங்கள இகழ்ந்து தள்ளறீங்க. மகாபாரதத்துல அர்ஜுனன் ஒரு வருஷ காலத்துக்கு திருநங்கையா வருவார். அதேபோல, சிகண்டிங்கற ஒரு கேரக்டரும் அதுல உண்டு. மகாபாரத சீரியல் போட்டா விழுந்து விழுந்து பாக்கறீங்க. அர்ஜுனா விருது கூட உண்டாக்கியிருக்கீங்க. ஆனா, நிஜத்துல எங்களை குறைந்தபட்சம் உயிருள்ள ஒரு ஜீவனாகூட ஏத்துக்கல. வீடுகள்ல நாயைக் கூட வளர்க்கறீங்க... ஆனா, கூடவே பொறந்த எங்களை துரத்தி அடிக்கறீங்க.
மாக்தலின்: இதெல்லாத்துக்கும் காரணம்... பரஸ்பர அன்பு பாராட்டல் என்கிறதை விட்டுட்டு, எல்லாத்தையுமே சமூகம், அந்தஸ்து, கௌரவம்கிற தராசுல வெச்சு மனித சமுதாயம் நிறுத்த பார்க்க ஆரம்பிச்சதுதான்.
கல்கி: சரியா சொன்னீங்க. ஒரு 200 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. மூணாவது பாலினமா... கௌரவத்தோடதான் வலம் வந்திருக்கோம். அதுக்குப் பிறகுதான், நாகரிக வளர்ச்சிங்கற பேருல... ஒரு இனத்தையே இப்படி கேவலமா மாத்திட்டாங்க.
இப்பவும் கெட்டுப்போகல.. உங்க அன்பும் அரவணைப்பும் எங்களுக்கு கிடைச்சா, எங்க மேல இந்த ஈனப் பார்வையெல்லாம் விழாம எல்லாரையும்போல நாங்களும் மனிதர்களா வாழ்வோம்! எங்களுக்கான சந்தோஷம், உரிமை பெத்தவங்களாலயே மறுக்கப்படுவது நியாயமா...?! நீங்க கொடுக்க ஆரம்பிச்சா, மொத்த சமூகமும் தன்னால தரும்.
தருவோமா?!

AvaL Vikatan - December 04, 2009