Saturday, July 09, 2011

இருவர்!

கட்டியக்காரி கலைஞர்களின் கடும் உழைப்பில், உழைப்பின் வியர்வையில் பிறந்த உன்னதமான படைப்பு ‘மொளகாப்பொடி’. அவர்கள் அத்தனைபேருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் இந்நாடகத்தில் வெற்றியில் நான் இன்புற்று கர்வம்கொள்ள இரண்டு மிகப்பெரிய தனிப்பட்ட காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் பெரும் வெற்றிப்படைப்பான ‘மெளகாப்பொடி’ என் ‚ஜித்தின் நெறியாள்கையில் அரங்கேறியது. இரண்டாவது காரணம் நாடகத்துறையில் நடிகையாக அவதரித்துள்ள என் தாயம்மாவின் ஆர்ப்பரிப்பான மேடை அரங்கேற்றம்.

இருவருக்கும் எனக்குமான தொடர்பு எல்லையற்ற தாயன்பைப்போன்றது. இவர்கள் இருவரும் எனக்கு உயிர்கொடுத்தவர்கள். என்னுடைய பாலின மாற்று அறுவை சிகிச்சையின் இரண்டாவதாக நடந்த பெரிய சிகிச்சையில் என்னோடு இரவும், பகலும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது இந்த இருவரும்தான். எனக்கென்று உறவுகள் சென்னையில் யாருமில்லாமல் தனியாக மருத்துவமனை படுக்கையில் நான் சாய்ந்தபோது என்னை பார்த்துக்கொண்டது ‚ஜித்தும், தாயம்மாவும்தான். ஒருவகையில் அவர்களின் குழந்தை நான். எனக்கு இரண்டாவது பிறவி கொடுத்ததும், என் உயிரைக்காத்ததும் இவர்கள்தான். இவர்கள் இருவரும் என்னுடைய இன்னும் இரண்டு தாய்கள் என்பதில் எனக்கு கர்வம், பெருமை.

கடந்த இரண்டுவருடங்களாக நாங்கள் அதிகம் சந்திப்பதில்லை. காரணம் சமூகத்திற்கான எங்கள் வழியில் நாங்கள் ஆற்றும் கடமைகளும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ச்சியாக சந்திக்கின்ற மாற்றங்களும், மனிதர்களும்தான். ஆனால் இவை எல்லாம் எங்களின் அன்பான உறவுக்கு தடையாக இருந்ததே இல்லை. எனக்கான ‚ஜித்தையும், எனக்கே எனக்காக தாயம்மாவையும் நான் இழக்கவில்லை. கால ஓட்டத்தின் மாறுதல்கள் புதிய பாதைகளை வகுத்தாலும் தடையற்ற, எங்களின் பிரதிபலன் எதிர்பார்க்காத தூய அன்பு ஒன்று மட்டும்தான் எங்களை எப்போதும் இணைத்துகொண்டிருக்கிறது.

‚ஜித்திற்கும், எனக்குமான நட்பை காதல் என்றும், பாசம் என்றும் யூகித்தவர்கள் எத்தனையோ பேர். நான் சென்னை வந்ததிலிருந்து என்னுடைய பணிகளுக்கு தோள்கொடுத்து உற்சாகப்படுத்தியது நட்பின் அடிப்படையில். ஆனால் எங்கள் உறவு என்பது தூய அன்பின் நிரந்தர அடையாளம். ஒரு விவரிக்க இயலாத ஒரு பந்தமாக எங்களுக்குள் இயல்பாக ஏற்பட்டது அது. எங்கள் இருவரின் வாழ்வில் பலர் இருந்தாலும் எங்கள் உலகம் வேறு. அது இரண்டு குழந்தைகளினுடையது. ‚ஜித்தின் படைப்பு உலகம் பேசப்பட உயர ஆரம்பித்ததில் சத்தமில்லாமல் இறுமாப்புக்கொள்கிறேன். தங்கக்கட்டியான என் தாயம்மாவையும் அழகான கிரீடமாக மாற்றிவிட்டானே ‚ஜித். எனது அன்பிற்குரிய இந்த இரண்டு பேரும் இணைந்த அனல் பறக்கும் இந்த ‘மொளகாப்பொடி’ என் நெஞ்சில் தேனை வார்த்த தித்திப்பு குடம்!

Tuesday, March 15, 2011

வரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்




அரவாணிகளும் பெண்கள்தான், மதிப்புக்குரிய பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து, கணவருடன் வாழ வேண்டும், சமூகத்தில் அந்தஸ்துடன் உலவ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய திருநங்கை கல்கி புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

www.thirunangai.net என்ற பெயரில் கல்கி தொடங்கியுள்ள இந்த இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்க்கும் அருமையான வேலையை செய்கிறது.

கல்கி - பொள்ளாச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை லாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2 சகோதரிகள். கல்கி மட்டுமே வீட்டின் ஒரே ஆண் வாரிசு.

கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
சிறு வயதிலேயே தனது சகோதரிகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பாமல் ஆண்களுடனேயே செலவிட விரும்பினார். தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உணர ஆரம்பித்தார். மேலும், அழகான பெண்களை விட துணிச்சலான, உறுதியான பெண்கள்தான் இவரை அதிகம் கவர்ந்தனர்.

13 வயதில் இவரது மனதுக்குள் அலையடித்த உணர்வுகளின் போராட்டத்தை தாயார் கண்டுபிடித்தார். கவலை கொண்டார்.

பள்ளிப் படிப்பிலிருந்து ஒரு நாள் விலகி முழுமையான திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் கல்கி. 14 வயதில் அரவாணிகள் குடும்பத்தில் இணைந்தார். இன்று கல்கி, சகோதரி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் - இயக்குநர்.

இவர் உருவாக்கியுள்ள திருநங்கை.நெட் இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்த்துத் தரும் வேலையைத் தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் அரவாணிகளுக்கு திருமணம் என்பது சர்வசாதாரண விஷயம். ஆனால் இந்தியாவில் இது மிக மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரவாணிகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது என்பதும், தேடுவதும் சாதாரண விஷயமல்ல. பல தடைகள், இடையூறுகள், சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன.

இதுவே கல்கி தனி இணையதளம் தொடங்க முக்கியக் காரணம். இதுகுறித்து கல்கி கூறுகையில், நிறைய ஆண்களுக்கு திருநங்கைகளுடன் பழக வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது மறுத்து விடுகிறார்கள்.

எங்களது சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நல்ல ஆண்களைக் கல்யாணம் செய்து குடும்பமாக வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமூகத்தில் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அரவாணிகள். அப்படிப்பட்டவர்களுக்கான தளம்தான் இந்த திருநங்கை.நெட்.

எங்களது இணையதளம் மூலம் வரன்களைத் தேடிக் கொள்ளலாம், நல்ல ஆண் துணைவர்களைத் தேடிக் கொள்ளலாம்.

எல்லோருக்கும் போலவே எங்களுக்கும் காதல் வரும். நல்ல கணவன் வேண்டும் என்ற ஆசையம் வரும். எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையுடனும், கணவருடனும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.

தற்போது இந்த இணையதளத்தில் சில அரவாணிகள் தங்களுக்கு வரன் தேவை என்று கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இந்த அரவாணிகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியும், துணைவிகளாக்கிக் கொள்ளவிரும்பியும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட பதில்கள் வந்துள்ளனவாம்.

அவர்களில் டாக்டர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களும் அடக்கமாம்.

இருப்பினும் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே வரன்கள் இறுதி செய்யப்படும் என்கிறார் கல்கி.

அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி (மகளிர் தினம்) அல்லது பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) ஆகிய ஏதாவது ஒரு நாளில் முதல் கல்யாணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கல்கி.

இந்தியாவில் அரவாணிகள் அல்லது திருநங்கைகள் குறித்த பார்வை மாறி வருகிறது. அரவாணிகளும் கூட மாறி வருகிறார்கள். பாலியல் தொழில், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதாரணப் பெண்களைப் போல திருநங்கைகளும், கணவன், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு மாறும் சூழல் தற்போது வந்துள்ளதாகவே கருதுகிறேன் என்கிறார் கல்கி.

மேல்சபையில் திருநங்கைகளுக்கு இடம்: "சகோதரி' அமைப்பு வேண்டுகோள்




செப்டம்பர் 23,2010,23:30 IST


சென்னை : ""தமிழக மேல் சபையில் திருநங்கைகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்,'' என்று திருநங்கைகளின், "சகோதரி' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை கல்கி சுப்ரமணியம் சமூக சேவையில் ஆர்வத்துடன் செயல்பட்டதால், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று 14 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.

பயணம் குறித்து சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கல்கி சுப்ரமணியம் கூறியதாவது:திருநங்கைளின் சமூக, பொருளாதார மேம்பாட்டு சேவைக்காக எட்டு வருடங்களாக பணியாற்றி வருகிறேன். "சகோதரி' என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் திருநங்கைகளுக்கு சட்ட ரீதியாக சமூக பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறேன். மனித உரிமை தொடர்பான சேவையும் செய்து வருகிறேன்.இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சமூக சேவை, சினிமா, அரசியல் போன்றவற்றில் சிறப்பாக சேவை செய்யும் ஒருவரை அமெரிக்க அரசு சுற்றுப் பயணத்துக்கு அழைப்பது வழக்கம்.இந்த வருடம் இந்திய பிரதிநிதியாக அமெரிக்க அரசு என்னை அழைத்துள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

வரும் அக்டோபர் 1ம் தேதி அமெரிக்கா செல்கிறேன். அங்கு வாஷிங்டன், சாலட் லேக் சிட்டி மற்றும் நியூயார்க்கில் சுற்றுப்பயணம் செய்கிறேன்.அமெரிக்காவில் திருநங்கைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்றும் அரசின் செயல்பாடுகளையும், மனித உரிமை செயல்பாடுகள், குழந்தைகள் மேம்பாடு பற்றியும் அறிந்து கொள்ள இப்பயணம் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. சுற்றுப்பயணம் முடித்து அக்டோபர் 17ம் தேதி சென்னை திரும்புகிறேன்.இங்கு திருநங்கைகள் பாலியல் தொந்தரவாலும், குடும்பத்தினராலும் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்; பலர் பிச்சைக்காரர்களாக உள்ளனர். இந்நிலை மாற, திருநங்கைகளின் நலம் காக்க நிறைய உழைப்பேன். தமிழகத்தில் மேல் சபை அமைக்கப்படுகிறது. இதில், திருநங்கைகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என,"சகோதரி' அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கல்கி சுப்ரமணியம் கூறினார்.