Saturday, April 06, 2013

விதியை எழுதினேன்.. - கவிதை : திருநங்கை கல்கி



விதியை எழுதினேன்..
__________________________

கடவுளுக்கு மனைவியாகி
ஒரே நாளில் விதவையான 
ஒரு பரிசோதனை கவிதை நான்.. 
என் தாலியின் வாழ்வு
ஒருநாள் மட்டும்.
அறுத்த என் தாலி
எங்கோ மரத்தில் கட்டப்பட்டு
மக்கிப்போய் மண்ணாகியிருக்கும்
அந்த தாலி
என் விதியை நிர்ணயிப்பதில்லை
என்பதை அறிந்துகொண்டேன்
எல்லோருக்கும் ஜாதகம்
இருக்கும்.
எனக்கு இல்லை
என் விதியை
நானே எழுதிக்கொள்ள
எனக்கிருக்கிறது
வலிமை மிக்க ஒரு மனம்
தெளிவு பெற்ற என் அறிவு.
அறுத்தெறிந்த தாலிக்கு
அர்த்தமில்லை
வெறும் மஞ்சள் கயிறு
அதில் ஒன்றுமில்லை
அந்த வேதனைச்சடங்கு
எனக்கு வேண்டாம்.
சடங்குகளை மூட்டைகட்டி
சாக்கடைக்குள் போட்டபின்
புன்னகை செய்ய கற்றுக்கொண்டேன்
பூக்களோடு பேச கற்றுக்கொண்டேன்
காதலிக்க கற்றுக்கொண்டேன்
கவிதை எழுத கற்றுக்கொண்டேன்
கவிதையாகவே
வாழவும் இன்று கற்றுக்கொண்டேன்.. 


- திருநங்கை கல்கி சுப்ரமணியம்-

1 comment:

Unknown said...

Truth of an experienced soul.