Thursday, May 22, 2014

மூன்றாம் பாலின அங்கீகாரம்: வெற்றிக்குப்பின்னால் தமிழ் திருநங்கைகள்

ஆகஸ்ட் 14, 2010.
63வது இந்திய சுதந்திரதினத்திற்கு முந்தைய நாள்தான் இந்தியாவில் வாழுகின்ற திருநங்கைகளின் சட்டரீதியான அங்கீகாரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்ட பொன்நாள். வித்திட்டப்பட்ட இடம் தமிழகத்தின் தலைநகரிலுள்ள மெட்ராஸ் ஜூடிஷியல் அகாடமி. 

தமிழ்நாடு சமூக நலத்துறை, சென்னை உயர்நீதி மன்றம், Tamilnadu State Legal Services Authority, National Legal Services Authority மற்றும் Madras Judicial Academy ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய SEMINAR ON ISSUES RELATED TO TRANSGENDER COMMUNITY என்ற கருத்தரங்கம்தான் சட்ட வல்லுனர்களின் ஆதரவையும், புரிதலையும் பெற்று இன்று சட்ட அங்கீகாரம் கிடைத்ததற்கு துவக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி ஆல்டமாஸ் கபீர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி M.Y. இக்பால், ஸ்ரீசதாசிவன், அப்போதைய சமூகநல அமைச்சர் திருமதி.கீதா ஜீவன், சமூக நலத்துறையின் அப்போதைய இயக்குனர் திருமதி.நிர்மலா, காவல்துறை உயர் அதிகாரி அர்ச்சனா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.`

இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் திருநங்கை சமூகத்தின் பிரச்னைகளை விரிவாக திருநங்கை கல்கி எடுத்துரைக்க அதற்கான தீர்வுகளை பிரியாபாபு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் திருநங்கை நூர்ஜஹான், திருநங்கை செல்வி ஆகியோரும் நீதிபதிகள் முன்னிலையில் உரையாற்றினர். திருநங்கை நூரி அவர்களும் பேசினார்.

இந்நிகழ்வுதான் NALSA  மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகளின் பிரச்னைகளை கொண்டு சென்ற முதல் முக்கிய நிகழ்வாகும்.

அதன்பிறகு ‘திருநர்களும், சட்டமும்’ (TRANSGENDER AND LAW) என்ற தேசிய அளவிலான முதல் கருத்தரங்கு பிப்ரவரி 04, 2011 அன்று புதுதில்லி விக்ஞான் பவனில் நடந்தது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் தேசிய கருத்தரங்கு இதுதான். இககருத்தரங்கை Delhi Legal Services Authority மற்றும் United Nations Development Program உடன் இணைந்து National Legal Services Authority  ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திருமிகு. ஆல்டமாஸ் கபீர் அவர்கள். தமிழகத்தில் நடந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்காக இது அமைந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்ற  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும் இது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆல்டமாஸ் கபீர், சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி M.Y. இக்பால், புதுதில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி விக்ரஜீத் சென் ஆகியோர் முன்னிலை வகித்தனர். UNDPயின் இந்திய இயக்குனர் கைட்லி வைசென்னும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

தேசிய அளவில் திருநங்கை சமூகத்தின் பிரதிநிதிகளாக தென்னிந்தியாவிலிருந்து பிரியாபாபு மற்றும் கல்கி ஆகியோர்  அழைக்கப்பட்டிருந்தனர். வடக்கிலிருந்து லக்ஷ்மி நாராயண் திரிபாதி, கவுரி சாவந்த் மற்றும் சபீனா பிரான்சிஸ் ஆகியோர் அழைக்கப்பட்டு பங்கேற்றனர்.

இத்தேசிய கருத்தரங்கின் முக்கிய நிகழ்வே திருநங்கைகள் நீதிபதிகள் முன்னிலையில் ஆற்றிய உரைதான். தொடக்க நிகழ்வு உரைகள், மற்றும் வரவேற்புரைக்குப்பிற்கு நீதிபதிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரு சபைகளில் அமரவைக்கப்பட்டனர். ஒரு சபையில் நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகள் கல்கி சுப்ரமணியம் மற்றும் பிரியாபாபுவும், மற்றொரு சபையில் நீதிபதிகள் மத்தியில் லக்ஷ்மிநாராயண் திரிபாதி, கவுரி சாவந்த் மற்றும் சபீனா பிரான்சிஸ் ஆகியோரும் விரிவாக இந்தியாவில் திருநர்களின் சமூக, பொருளாதார பெரும்பின்னடைவையும், துன்பியல் வாழ்க்கையையும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர். வழக்கறிஞர் லயா மெஹ்தினி, டாக்டர் வெங்கடேஷ் சக்ரபாணி, எர்னெஸ்ட் நரோனா, சமூக ஆர்வலர் சொனாலி மெஹ்தா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள State Legal Services Authority அமைப்புகள் இத்தகைய நிகழ்வுகளை நடத்தின.

 திருநங்கை பிரியாபாபு Delhi Legal Services Authority நடத்திய நிகழ்விலும், சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்சூரில் நடந்த நிகழ்விலும், Tamilnadu Legal Services Authority நடத்திய இன்னொரு நிகழ்விலும், பங்கேற்று மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

திருநங்கை கல்கி Maharashtra State Legal Services Authority  மற்றும் Article 39 அமைப்புகள் மும்பையில் நடத்திய நிகழ்விலும், அஸ்ஸாமிலுள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்திலும், மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள Indian Judicial Academy யிலும், ஹரியானாவிலுள்ள Jindal Global School of Lawவிலும் பங்கேற்று மாற்றுப்பாலினத்தவரின் இன்றைய வாழ்வுநிலை பற்றியும், சட்ட அங்கீகாரத்தின் தேவைபற்றியும் உரையாற்றினார்.



திருநங்கை ஜீவா ராய்ச்சூரில் நடந்த நிகழ்விலும் ஹைதராபாத்தில் நடந்த சட்ட நிகழ்விலும், திருநங்கை ஆல்கா மற்றும் பாரதி கண்ணம்மா ஆகியோர் பல்வேறு சட்ட நிகழ்வுகளிலும், மாவட்ட அளவிலான நிகழ்வுகளில் கோவையில் சங்கீதாவும், திருச்சியில் காஜோலும், தூத்துக்குடியில் விஜியும் நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகளின் துன்பியல் வாழ்க்கையை நீதிபதிகளிடம் முறையிட்டார்கள். இதுபோல பல மாநிலங்களின் திருநங்கை பிரதிநிதிகள் பல்வேறு சட்ட கருத்தரங்கங்களில் பங்கேற்று தங்கள் வாழ்க்கை சிக்கல்களை, சட்ட அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். கர்நாடகாவில் திருநங்கை அக்காய், புதுதில்லியில் சீத்தா மற்றும் ருத்ராணி செட்ரி, மேற்கு வங்காளத்தில் அமிதாவா சர்கார் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் NALSA (National Legal Services Authority)  இந்திய உச்சநீதி மன்றத்தில் திருநர்களுக்கு சமூக நீதிகேட்டு 2012ல் வழக்கு தொடுத்தது. வழக்குத்தொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 15, 2014 அன்று தமிழக திருநங்கைகள் தினத்தன்று திருநங்கைகளின் பாலின அடையாளத்தையும்  உரிமைகளையும் அங்கீகரிக்கிற வரலாற்றுச்சிறப்பு மிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியாகும்.

நம்நாட்டிலுள்ள சாதாரண எளிய திருநங்கைகளின் உழைப்பும், அளப்பறிய பணிகளும்தான் பெருமளவில் இத்தீர்ப்பின் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறது என்பதும், அதிலும் தமிழக திருநங்கைகள்தான் போராட்டக்களத்தில் பெரும்பங்கு வகித்தனர் என்பதும் மறுக்கமுடியாத பெருமைக்குரிய உண்மையாகும்.


REFERENCES:

August 14th, 2010: 
Tamilnadu Seminar:
http://www.thehindu.com/news/national/article1159795.ece 
http://www.deccanherald.com/content/135025/judges-favour-law-social-acceptance.html
http://timesofindia.indiatimes.com/city/chennai/Jurists-call-for-laws-quota-to-ensure-transgenders-rights/articleshow/6312542.cms?referral=PM
http://www.dnaindia.com/india/report-govt-should-enact-law-to-protect-transgenders-rights-experts-1423384


Feb 4th, 2011
National Seminar:
http://www.thehindu.com/news/national/article1159795.ece
http://www.deccanherald.com/content/135025/judges-favour-law-social-acceptance.html


District seminars:
http://www.hindu.com/2011/01/28/stories/2011012853510600.htm