திருநங்கைகள் குறித்து ஏராளமான சந்தேகங்களும், தவறான புரிதல்களும் பொதுவெளிச்சமூகத்தில் உள்ளன. அவ்வப்போது ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிடுகின்றன. இந்த முரண்பட்ட செய்திகளால் மக்கள் திருநங்கைகளின்பால் சந்தேகம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. திருநங்கைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக செய்லாற்றிவரும் ‘சகோதரி’, பொதுமக்களில் கடைக்கோடியினர்கூட சரியாக திருநங்கைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ளது.
19-04-2009 அன்று மாலை சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை அருகே ‘திருநங்கைகள் மதிப்புக்குரியவர்கள்’ என்ற தலைப்பில் ஒரு வீதி நிகழ்வை பொதுவெளி அரங்கில் நிகழ்த்தியது ‘சகோதரி’.
‘அடையாளம்’ என்ற வீதி நாடகம், வலி என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘திருநங்கைகளை மதிப்போம்! இணையாக நடத்துவோம்!’ என்ற வாசகங்களின் கீழே ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திடும் நிகழ்வும் நடந்தது. ‘அடையாளம்’ நாடகத்தில் நண்பர் ஸ்ரீஜித்தும் நானும் இணைந்து இயக்கி நடித்தோம்.
கவிதை வாசிப்பு நிகழ்வில் பல இளம் கவிஞர்கள் வந்திருந்து திருநங்கைகள் குறித்து தங்களுடைய கவிதைகளை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக அளவில் திருநங்கைகள் வந்திருந்தனர். அவர்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தது. தோழிகள் மோனல், சந்தியா, ஆல்கா மற்றும் உபாசனா ஆகியோர் மிகவும் உதவினார்கள். காவல்துறையினரின் ஒத்துழைப்பும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களின் ஆதரவும் இந்நிகழ்ச்சிக்கு பெரும் வலு சேர்த்தது. பொதுமக்கள் மிகவும் ஈர்ப்புடன் அமைதியான முறையில் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
‘அடையாளம்’ நாடகம் ஓரிரவில் என்னால் இயற்றப்பட்டது. சமூகத்தில் திருநங்கைகள் அனுபவிக்கின்ற அவலங்களை துல்லியமாக விளக்கும் ஒரு முயற்சியாக இந்நாடகத்தை உருவாக்கினேன்.. அவர்கள் பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதும் எதனால் என்பது குறித்தும், பொது இடங்களில் அவர்களின் செயல்பாடுகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருப்பதில்லை என்பதுபற்றியும் சரியான விளக்கங்கள் இந்நாடகத்தின்மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சி முழுவதுமாக பதிவு செய்தது. ஒருவாரம் கழித்து இந்நிகழ்வு இருமுறை ஒளிபரப்பப்பட்டது என்று அறிந்தேன். மக்கள் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். தினகரன், டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய நாளிதழ்கள் படச்செய்தியாக இந்நிகழ்வை வெளியிட்டன. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ் புகைப்படங்களுடன் சிறப்புக்கட்டுரை வெளியிட்டிருந்தது. கடற்கரையில் நடந்த திருநங்கைகளின் இந்த எளிய நிகழ்வு ஒரு முக்கியப்பதிவாகும்.
இதோ சில புகைப்படங்கள் :
மேலும் புகைப்படங்கள் இங்கே>>>